விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசு பேருந்தும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். மேலும் 10 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
உடுமலைப்பேட்டை குமரன் தெருவைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன் நரேன்கார்த்திக் (28). இவருக்கும் விருதுநகர் ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்த பெண்ணுக்கும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து ராஜபாளையத்தில் உள்ள மணமகனின் தாத்தா வீட்டிற்கு செல்வதற்காக உறவினர்கள் ஒரு காரிலும், மணமக்கள் வேறு ஒரு காரிலும் ஆர்.ஆர்.நகரிலிருந்து வந்து கொண்டிருந்தனர்.
சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் பருத்தி ஆராய்ச்சி நிலையம் அருகே சென்ற போது காரும், எதிரே ராஜபாளையத்திலிருந்து கமுதி நோக்கி வந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் பலத்த காயம் அடைந்த மணமகனின் தம்பி நவீன்குமார் (28) ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்த 10 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இவர்கள் அனைவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்தில் இறந்த நவீன்குமாருக்கு மார்ச் மாதம் 23 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.