சாத்தூர் அருகே படந்தால் சந்திப்பு, ஆர்.ஆர். நகர் பகுதிகளில் நிழற்குடை அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலியிலிருந்து மதுரை,சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் நெடுந்தூர பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலை வழியாகச் செல்கின்றன. இந்நிலையில் இப் பேருந்துகள் அனைத்தும் சாத்தூர் நகருக்குள் வராமல் நான்குவழிச் சாலையில் உள்ள படந்தால் சந்திப்பில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்கின்றன. மேலும் வெளியூரிலிருந்து சாத்தூர் நகருக்கு வருவோரும் இப்பகுதியிலேயே இறக்கிவிடப்படுகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் அனைவரும் இரவு, பகலாக வெயிலிலும், மழையிலும், நீண்ட நேரம் பேருந்துக்காக வெட்ட வெளியில் காத்திருந்து பயணம் செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் விபத்துகளும் அதிகளவில் ஏற்படுகின்றன. இதே போன்று சாத்தூரை அடுத்த ஆர்.ஆர்.நகர் பகுதியிலும் நான்கு வழிச் சாலையில் பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் இரு புறங்களிலும் நிழற்குடை இல்லை.
எனவே இச்சாலைகளின் இருபுறமும் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என பேருந்து பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.