விருதுநகரில் ரயில்வே மேம்பாலப் பணிகள் மந்தம்: பொதுமக்கள் அவதி

விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் ரயில்வே மேம்பால பணிகள் பெருமளவில் நிறைவடைந்தும் பாலம் திறக்கப்படாததால்

விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் ரயில்வே மேம்பால பணிகள் பெருமளவில் நிறைவடைந்தும் பாலம் திறக்கப்படாததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப் பட்டு வருகின்றனர்.
விருதுநகர், ராமமூர்த்தி சாலையில் நகரின் இரு பகுதியை பிரிக்கும் வகையில் ரயில்வே கடவுப்பாதை இருந்து வந்தது. இதனால், பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் நாள்தோறும் ரயில்வே கடவுப்பாதையைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. 
தினமும் 60 -க்கும் மேற்பட்ட ரயில்கள் விருதுநகர் சந்திப்பு வழியே வந்து செல்வதால், இந்த கடவுப்பாதை அடிக்கடி மூடப்பட்டது. இதனால், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. எனவே, இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டுமென பல்வேறு கட்சியினர் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். 
இதன் பேரில், கடந்த 2016 மார்ச் 4 இல் ரயில்வே மேம்பால பணிகள் தொடங்கப்பட்டன. இப்பணியானது 18 மாதத்தில் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் சார்பில் தண்டவாள பகுதியில் மேம்பாலங்கள் பொருத்தப்பட்டன. 
மேலும், தண்டவாளத்தின் இரண்டு புறமும் நெடுஞ்சாலைத் துறையினர் பாலம் அமைக்கும் பணியை நிறைவு செய்துள்ளனர். ஆனால், பாலம் தொடங்கும் இடத்தின் இரு பகுதிகளிலும் சாலைகள் அமைக்கப்படவில்லை. மேலும், மேம்பாலத்தில் தெரு விளக்குகள், கீழ்ப் பகுதியில் மழை நீர் சேகரிப்பு, பாதசாரிகள் சாலையை கடக்க படிக்கட்டுகள், அணுகுச் சாலை ஆகியனவும் அமைக்கப்படவில்லை. இதனால், 35 மாதங்கள் கடந்தும் பாலம் அமைக்கும் பணி விரைவாக நடைபெற வில்லை. 
எனவே, இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து இப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com