விருதுநகர் உழவர் சந்தை வளாகம் அரசு அலுவலர்களின் ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துமிட மாக மாறி விட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள புல்லலக்கோட்டை சாலையில் உழவர் சந்தை தொடங்கப்பட்டது.
இதில் 15 க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு விவசாயிகள், தாங்கள் விளைவித்த விவசாய பொருள்களை நேரடியாக விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டது. இதில் பதிவு செய்த விவசாயிகள், தங்களது விளைப் பொருள்களை உழவர் சந்தையில் விற்பனை செய்து வந்தனர்.
இதற்காக கிராமப் புறங்களிலிருந்து காய்கறிகளை கொண்டு வரும் விவசாயிகளிடம் அதற்கான பேருந்து கட்டணம் வாங்குவதில்லை. இதனால், காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைத்தது.
பொதுமக்களும் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் சென்றனர்.
இந்நிலையில், உழவர் சந்தையில் உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், காய்கறி உள்ளிட்ட வேளாண் பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் குறித்து வேளாண் அலுவலர்கள் உரிய கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால், படிப்படியாக விவசாயிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இதன் காரணமாக பொதுமக்கள் வருகையும் குறைந்து விட்டது. இதைத் தொடர்ந்து தற்போது உழவர் சந்தை வளாகம் அரசு அலுவலர்களின் ஜீப், கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி விட்டது.
எனவே, விவசாயிகள் குறித்து கணக்கெடுத்து, அவர்களை உழவர் சந்தையில் காய்கறி உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்ய வேளாண் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.