நிறுத்தப்பட்ட திருச்சுழி-திருச்செந்தூர் பேருந்தை மீண்டும் இயக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சுழியைச் சுற்றியுமுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பயன்படும் விதமாக திருச்சுழியிலிருந்து காலை சுமார் 5.45 மணிக்கு திருச்செந்தூருக்கான பேருந்து கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் இயக்கப் பட்டு வந்தது. அப்பேருந்து திருச்சுழி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, எட்டயபுரம், தூத்துக்குடி ஆகிய ஊர்களை இணைத்து இயக்கப்பட்டதால் திருச்சுழி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி சுற்றுவட்டார பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் திருச்செந்தூர் செல்ல வசதியாக இருந்தது.
இதனிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சுழி- திருச்செந்தூர் வழித்தடப் பேருந்து நிறுத்தப்பட்டு விட்டது. உரிய காரணங்களின்றி இப்பேருந்து நிறுத்தப்பட்டதால் அதிகம் பாதிப்புக்குள்ளானவர்கள் திருச்சுழி சுற்றுவட்டாரப் பொதுமக்களே. இதனால் திருச்சுழி சுற்றுவட்டார கிராமத்தினர் முதலில் திருச்சுழிக்குப் பேருந்தில் வந்து பின்னர்அருப்புக்கோட்டைக்கு மற்றொரு பேருந்தில் பயணம் செய்து அதன் பின்னர் அங்கிருந்து திருச்செந்தூருக்குப் பேருந்தில் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதன்காரணமாக கூடுதல் பேருந்துக் கட்டணச் செலவுக்கு தாங்கள் ஆளாகியுள்ளதாக திருச்சுழி சுற்றுவட்டாரப் பொதுமக்களிடையே புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் சமூகநல ஆர்வலர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த பலனுமில்லையென தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் திருச்சுழி- திருச்செந்தூர் வழித்தடப் பேருந்தை மீண்டும் இயக்க திருச்சுழி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.