சாலையில் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி
சிவகாசியில் உள்ள ஷீல்டு சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையிலிருந்து ரயில் நிலையம் செல்லும் ஷீல்டு சாலையில், அரசு மருத்துவமனையின் நுழைவுவாயிலருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் தேங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளது. ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வரும் வாகனங்கள் திருத்தங்கல், ஆமத்தூர், விருதுநகருக்கு இச்சாலை வழியே செல்கின்றன. இந்நிலையில், இச்சாலையில் பள்ளம் உள்ளதால், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இரு சக்கர வாகனத்தில் செல்வோரும் சிரமப்படுகின்றனர். மேலும், இரவு நேரத்தில் இச்சாலையில் போதிய மின்விளக்கு இல்லாததால், இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர்.
எனவே, நகராட்சி நிர்வாகம் இச்சாலையிலுள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.