சாத்தூர் அருகேயுள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டி நியாய விலைக் கடை கட்டடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் உள்ளன. இப் பகுதியில் நியாய விலைக் கடை செயல்பட்டு வந்தது. இந்தக் கட்டடம் கட்டப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாவதால் சிதிலமடைந்து, வெளிப்புறச் சுவர்கள் இடிந்து விழுந்து வருகின்றன.
எனவே, இங்கிருந்த நியாய விலைக் கடை அருகிலுள்ள ஊராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இடியும் நிலையில் உள்ள நியாய விலைக் கடை கட்டடத்தை சீரமைக்க பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நியாய விலைக் கடை கட்டடத்தின் அருகே கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும், அங்கன்வாடி மையமும் உள்ளன. எனவே, குழந்தைகள் ஓடியாடி விளையாடும் இப்பகுதியில் இடிந்து விழுந்து வரும் நியாய விலைக் கடை கட்டடத்தை சீரமைக்கவோ அல்லது அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்டவோ நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.