மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் அருப்புக்கோட்டையை அடுத்துள்ள சேதுராஜபுரம்- செட்டிக்குறிச்சி இடையிலான சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் அருப்புக்கோட்டையை அடுத்துள்ள சேதுராஜபுரத்திலிருந்து செட்டிக்குறிச்சி வரையிலான சுமார் 5 கிலோமீட்டர் நீளச்சாலை சேதமடைந்து மேடு, பள்ளங்களுடன் காட்சி அளிக்கிறது. இதனால் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. இதுதொடர்பாக செட்டிக்குறிச்சியைச் சேர்ந்த விவசாயி ரங்கராஜன் கூறியதாவது: மதுரை- தூத்துக்குடி நான்குவழிச்சாலை 16 டன் எடை ஏற்றிய லாரிகள் மட்டுமே செல்லும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இச்சாலையில் சுமார் 60 டன் வரை சுமை ஏற்றிய லாரிகள் வருவதால் அவற்றின் பாரத்தை தாங்க முடியாமல் சாலை சேதமடைந்துவிடுகிறது. குறிப்பாக அதிக சுமை ஏற்றிய லாரிகள் சென்ற தடம் பதிந்து நாளடைவில் ஒரு அடிக்கு உயரமாகவும், பள்ளமாகவும் மாறி விட்டன. இதையறியாமல் மதுரை-தூத்துக்குடி நெடுஞ்சாலையாதலால் அதிகவேகத்தில் வரும் கார்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன என்றார்.
விரைவில் சேதுராஜபுரம்- செட்டிக்குறிச்சி இடையிலான இச்சாலையை சீரமைத்து விபத்துக்களைத் தடுக்கவேண்டுமென சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.