சபரிமலை ஐயப்பன் கோயிலில் இரண்டு பெண்கள் சுவாமி தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, விருதுநகரில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் வியாழக்கிழமை கண்டன ஊர்வலம் நடைபெற்றது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் போலீஸ் பாதுகாப்புடன் 2 பெண்கள் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோயிலில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில் சபரிமலையில் பெண்களை அனுமதித்ததற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதன் அடிப்படையில், விருதுநகரில் ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் தேசபந்து மைதானத்தில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் பின்னர் பஜார், மேலரத வீதி வழியாக ஊர்வலமாகச் சென்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஐயப்ப பக்தர்களின் மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி கோரியிருந்தனர்.
ஆனால் போலீஸார் அனுமதி மறுத்ததால் ஐயப்ப பக்தர்கள் கண்டன ஊர்வலம் நடத்தினர்.