தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி நடத்தவுள்ள குரூப்-2 பிரதானத் தேர்வை, வேறு தேதிக்கு மாற்றவேண்டும் என தமிழ்நாடு தட்டெழுத்து-சுருக்கெழுத்து-கணினி பள்ளிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சோம. சங்கர், தமிழக முதல்வருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: பல ஆண்டு காலமாக பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில் (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) தட்டெழுத்துத் தேர்வுகளை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தி வருகிறது. அதன்படி, 2019 பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் தட்டெழுத்துத் தேர்வுகள் நடைபெறுகின்றன. இதற்கான கால அட்டவணையும், அத்துறையின் இணையதளத்திலும், நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளன. இந்நிலையில், இதே தேதியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 தேர்வு தேதியை அறிவித்துள்ளது. இதனால், வணிகவியல் கல்வி நிலையங்களில் மாணவர்கள் பல மாதங்களாக பயிற்சிக் கட்டணம் செலுத்தி தேர்வு எழுதவுள்ள நிலையில், எந்தத் தேர்வினை எழுதுவது என்ற குழப்பத்துக்குள்ளாகியுள்ளனர்.
எனவே, தொழில்நுட்பக் கல்வித் துறை நடத்தும் தேர்வு நாள்களில் இதுபோன்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் குறுக்கிடாதவாறு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல், குரூப்-2 தேர்வுக்கான தேதியையும் மாற்ற வேண்டும் என, அவர் அம்மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.