விருதுநகரில் பாதாளச் சாக்கடைக்கான வீட்டு இணைப்பு வழங்கும் பணி மிகவும் தரமற்ற முறையில் நடைபெற்று வருவதாக, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2007 இல், விருதுநகர் நகராட்சிப் பகுதியில் ரூ.27 கோடி மதிப்பில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. நகரின் கிழக்குப் பகுதியில் பணிகள் நிறைவுபெற்ற நிலையில், மேற்குப் பகுதியில் 10 சதவீதப் பணிகளே நிறைவடையாமல் உள்ளன.
மேலும், நகரின் பிரதான சாலை மற்றும் தெருக்களில் பாதாளச் சாக்கடை ஆள் இறங்கும் தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன.
இதிலிருந்து வீடு வரை குழாய்கள் அமைத்து, வீட்டின் அருகே சதுர வடிவிலான தொட்டிகள் கட்டுவதற்கு ரூ.6 கோடி மதிப்பிலான பணி தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், தொட்டி கட்டும் பணிகள் முறையாக நடைபெற வில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கட்டி முடிக்கப்பட்ட சில நாள்களிலேயே தொட்டிகள் உடைந்து வருகின்றன. மேலும், தொட்டியின் மேல் போடப்பட்டுள்ள சிமென்ட் சிலாப்களும் உடைந்து வருகின்றன.
இந்நிலையில், சேதமடைந்த தொட்டிகளை சீரமைக்காததால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
அதேநேரம், வீட்டு இணைப்புக்கு உரிமையாளர்கள் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டியதில்லை என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், தனியார் நிறுவன ஊழியர்களோ ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை வசூல் செய்வதாக, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, தரமான பாதாளச் சாக்கடை தொட்டி அமைப்பதுடன், கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.