விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
சாத்தூர் அண்ணாநகர் மக்கள் நல இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் சிறுவர், சிறுமியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்பு சாரா ஒட்டுநரணி மாநில துணைச்செயலாளர் இளங்கோவன் பரிசுகள் வழங்கினார்.
இதேபோன்று படந்தாலில் உள்ள அமிர்தா தொண்டு நிறுவனம், மக்கள் சேவை இளைஞர் இயக்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பெண்களுக்கான கோலப்போட்டி, உறியடித்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற பெண்களுக்கு அமிர்தா தொண்டு நிறுவனத் தலைவர் உமையலிங்கம் பரிசுகளை வழங்கினார்.
மேலும் "ரூரல் சேரிடபுள்' தொண்டு நிறுவனம் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. அதன் நிறுவனத்தலைவர் லட்சுமணப்பெருமாள் கலந்து கொண்டு சிலோன்காலனி, வாழவந்தாள்புரம், சாமியார்காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆதரவற்ற முதியவர்கள், குழந்தைகளுக்கு புத்தாடைகளை வழங்கினார்.
சமத்துவப் பொங்கல்: சாத்தூர் தூய திரு இருதய ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து, பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இதே போன்று சாத்தூர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, என்ஜிஓ காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.