விருதுநகரில் உடைந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் காசுக்கடை பஜார் அருகே விவேகானந்தா தெரு உள்ளது. மிகவும் குறுகலான இத்தெருவில் இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மட்டுமே செல்ல முடியும். இத்தெருவில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள 2 மின் கம்பங்கள் சேதமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளன. ஏற்கனவே இப்பகுதியில் தெருவிளக்குகள் முழுமையாக எரிவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மின் கம்பங்களும் உடைந்த நிலையில் இருப்பதால் பொது மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே உடைந்த மின் கம்பங்களை சீரமைக்க மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.