ராஜபாளையம் அருகே மம்சாபுரத்தில் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 7 நாள் சிறப்பு முகாம் கடந்த ஜூன் 24ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியின் சுமார் 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டனர். குறிப்பாக மம்சாபுரத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில் உள்ள மிகப்பழமையான மன்னர் காலத்து வழிப்போக்கர்கள் தங்கும் கல்மண்டபத்தை சீரமைத்தனர். மேலும் அங்கு சுமார் 50 மரக்கன்றுகளை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகம் கூடும் இடங்களில் நட்டனர். இதில் ஒரு பகுதியாக 26 ஆம் தேதி போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பின்பு கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் இணைந்து செண்பகத்தோப்பு செல்லும் வழியில் அமைந்துள்ள வள்ளலார் இல்லம் சென்று அங்கு பயிலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு விளையாட்டுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள், பழங்கள் மற்றும் அவர்கள் படிப்பதற்கு தேவையான பொருள்களை வழங்கினார்கள். இந்த 7 நாள் சிறப்பு முகாமை கல்லூரி முதல்வர் எல்.கணேசன், கல்லூரின் துணை முதல்வர் எஸ். ராஜகருணாகரன் மற்றும் பொது மேலாளர் (நிர்வாகம்) செல்வராஜ் வழிகாட்டுதலின் படி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கோ.கற்பகவேல் நடத்தினர்.