ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் கழகப் பொதுக்குழுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு கல்லூரி ஆட்சிமன்றக் குழுச் செயலர் பி.எஸ்.விஜயராகவன் தலைமை வகித்து "மாணவர்களின் வளர்ச்சியில் பெற்றோர்கள்-ஆசிரியர்களின் பங்கு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
கல்லூரி ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் சங்கர் கணேஷ் வாழ்த்திப் பேசினார். 500-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கல்லூரி முதல்வர் வெங்கட்ராமன் கல்லூரியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் புதிதாக தொடங்கவுள்ள பாடநெறிகள் ஆகியவற்றை சுட்டிக் காட்டினார்.
சுயநிதிபாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளரும், வரலாற்றுத் துறைத் தலைவருமான வெங்கடேஸ்வரன் "கல்லூரியில் மாணவர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார். இயற்பியல் துறை பேராசிரியர் சிவராமமூர்த்தி "மாணவர்கள் எதிர்கொள்ளும் உடல், மனம் சார்ந்த பிரச்னைகள்அவற்றின் தீர்வுகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
முன்னதாக கல்லூரி பொருளாதாரத் துறைத்தலைவர் சிதம்பரநாதன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி விஷ்ணுசங்கர் கல்லூரி வேலைவாய்ப்பு மையம் மூலம் மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தரப்படும் வேலைவாய்ப்பு விவரங்களை எடுத்துரைத்தார்.