சாத்தூர் வெங்கடாசலபதி கோயிலில் ஆனிப் பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாள் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை பெரிய கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்தார்.
சாத்தூரில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வெங்கடாசலபதி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆனிப் பிரம்மோற்ஸவத் திருவிழா கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த திருவிழா 12 நாள்கள் நடைபெறும். இத்திருவிழாவில் நாள்தோறும் பெருமாள் பல்லக்கு சேவை, பெரிய கருட வாகனம், சிறிய கருட வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி முக்கிய வீதிகளின் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதில் ஐந்தாம் திருவிழாவான வெள்ளிக்கிழமை இரவு அலங்கரிக்கப்பட்ட பெருமாள், பெரிய கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் பாலசுப்பிரமணியனின் பரம்பரை குடும்பத்தாரின் முன்னிலையில், பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள், பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் வடக்கு, தெற்கு உள்ளிட்ட ரத வீதிகளின் வழியாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இவ்விழாவில் சாத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும், கோயில் நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர்.மேலும் சனிக்கிழமை மாலை பெருமாள் பல்லக்கில் படந்தால் கிராமம் சென்று, அங்கு அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பிரம்மோற்ஸவத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனித் தேரோட்டம் ஜூலை 16 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.