சாத்தூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள வேளாண் பயிற்சி மைய கட்டடத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சுப்பிரமணியாபுரம் கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில், வேளாண் பயிற்சி மைய கட்டடம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த கட்டடத்தை பயன்படுத்தாமல், சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ளது. குடியிருப்புப் பகுதியில் இந்தக் கட்டடம் அமைந்துள்ளதால், இப்பகுதியை கடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆபத்தை உணராமல் இப்பகுதியைச் சேர்ந்த சிலர் சேதமடைந்த கட்டடத்தில், விறகுகளை அடுக்கி வைத்துள்ளனர். மேலும் இரவு நேரங்களில் இக்கட்டடத்தில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாகவும் இப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே இக்கட்டடத்தை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.