தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் "குரூப் 4' தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை கூறியது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் "குரூப் 4' பணியிடங்களான கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளுக்கு 6,491 பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதள முகவரியில் ஆன்லைன் வழியாக ஜூலை 14-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்று வருகிறது. மேலும், மாதந்தோறும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும்.
பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகத் தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்தில் தேர்வுக்கான புத்தகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல், தேர்வுக்கான பாடக் குறிப்புகளும் வழங்கப்படும்.
அத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள், அதற்கு ஆதாரமாக ஆன்லைன் விண்ணப்பத்தின் நகல், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை, மார்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.