அருப்புக்கோட்டையில் பல்வேறு மகளிர் அமைப்புகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பிரசாரப் பேரணி மற்றும் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
அருப்புக்கோட்டை புதிய பேருந்துநிலையம் முன்பாகத் தொடங்கிய இப்பேரணிக்கு தமிழ்நாடு அளவிலான மகளிர் ஒருங்கிணைப்பு அமைப்பின் செயலர் ஏ.சிவகாமி தலைமை வகித்துத் தொடங்கி வைத்தார்.
இப்பேரணியின் போது மகளிர் தொடர்பான உரிமைகள் குறித்தும், மகளிர் மீதான வன்கொடுமைகள், பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி வந்த பெண்கள் விழிப்புணர்வு முழக்கமிட்டபடி சென்றனர்.
அதனையடுத்து மங்கள மாரியம்மன் மண்டப வளாகத்தில் சிறப்புக் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு மகளிர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் அஞ்சலி வரவேற்றார். செயலர் சிவகாமி சிறப்புரையாற்றியாற்றினார்.
உடன் இந்நிகழ்ச்சியில் வழக்குரைஞர் தாமரை, விருதுநகர் மகளிர் அமைப்பைச் சேர்ந்த கீதா லட்சுமி, அருப்புக்கோட்டை இன்சார்ட் என்ஜிஓ அமைப்பின் நிர்வாகி சுலோச்சனா, கோபாலபுரம் மல்லிகை மகளிர் அமைப்பைச் சேர்ந்த மீனாட்சி, ஐஸ்வர்யம் எனும் மகளிர் அமைப்பின் தலைவி செல்வி, அருப்புக்கோட்டை கே.எம்.எம்.டிரஸ்ட் மகளிர் அமைப்பின் நிர்வாகி கனகாம்பாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு மகளிர் அமைப்புகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.