அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் நகரில் சாலையோர மரங்களின் கிளைகள் உயரழுத்த மின்கம்பிகளை உரசுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு மரக்கிளைகளை அகற்றியோ அல்லது மின்கம்பிகளை மாற்று வழியில் அமைத்தோ விபத்தைத் தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை நகரின் 32 ஆவது வார்டுக்குள்பட்டது ராமசாமிபுரம். அருப்புக்கோட்டையிலிருந்து பந்தல்குடி செல்லும் பிரதானச் சாலை இந்நகர் வழியாகச் செல்கிறது. இப்பிரதானச் சாலையின் இரு ஓரங்களிலும் நிழல்தரும் புளியமரங்கள் அதிகம் உள்ளன. இந்நிலையில் இச்சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களுக்கிடையிலான உயரழுத்த மின்கம்பிகள் அங்குள்ள மரங்களின் கிளைகள் மீது உரசி செல்கின்றன. இதனால் அதிக காற்று அல்லது மழை காரணமாக இந்த மின்கம்பிகள் அறுந்து சாலை மீது விழும் அபாயச் சூழல் நிலவுகிறது. எனவே மின்கம்பிகளை மாற்றுப் பாதையில் கொண்டு சென்றோ அல்லது மரக்கிளைகளை அகற்றியோ உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.