நிலம் தருவதாகக் கூறி ரூ.21 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாக திருத்தங்கல் ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருத்தங்கல் சிறுவர் பூங்காத் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (47). இவர் மாத தவணையில் பணம் செலுத்தினால் நிலம் பதிவு செய்யப்படும் எனக் கூறி, விருதுநகரில் ரியல் எஸ்டேட் அலுவலகம் வைத்து தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் சென்னை வேளச்சேரிப் பகுதியைச் சேர்ந்த சேதுராமன் (70)இவரிடம் ஏஜென்டாக சேர்ந்து 100 நபர்களைச் சேர்த்து, மாதாமாதம் பணம் வசூல் செய்து, மொத்தம் ரூ. 21 லட்சத்தை சீனிவாசனிடம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து சீனிவாசன், பணம் கொடுத்தவர்களுக்கு கள்ளிக்குடி பகுதியில் நிலம் தருவதாக கூறினாராம். ஆனால் பல முறை கேட்டும் சீனிவாசன் நிலம் கொடுக்க வில்லையாம். சேதுராமன் பணத்தை திருப்பி கேட்ட போது, பணத்தை தரமறுத்து விட்டாராம்.
இதைத் தொடர்ந்து சேதுராமன், சிவகாசி நீதித்துறை நடுவர் எண் 2 இல் புகார் மனு அளித்தார்.
அதில் நிலம் பதிவு செய்து தருவதாகக் கூறி தன்னிடம் சீனிவாசன் ரூ.21 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு, நிலத்தை பதிவு செய்து கொடுக்க வில்லை. மேலும் பணத்தை திருப்பி கேட்டபோது, தரவும் இல்லை எனவும், அவர்மோசடி செய்துவிட்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து நீதிமன்றம் சீனிவாசன் மீது மோசடி வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் திருத்தங்கல் போலீஸார் சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.