அருப்புக்கோட்டையில் குடிநீர் கோரி பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் குடிநீர் கோரி, பெண்கள் காலிக் குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் குடிநீர் கோரி, பெண்கள் காலிக் குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டை நகரில் உள்ள 36 வார்டுகளுக்கும் 15 நாள்களுக்கொரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதனால், போதிய தண்ணீர் இல்லாததால், பொதுமக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
இதையடுத்து, அருப்புக்கோட்டை பாவடித்தோப்பு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது,  24 மற்றும் 25 ஆவது வார்டுகளில் 30 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. 
ஆனால், தற்போது ஒரு மாதத்துக்கு மேலாகியும் குடிநீர் வழங்காததால், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, எங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் விநியோகிக்கக் கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என, பெண்கள் தெரிவித்தனர். 
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீஸார், சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் 
பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பெண்கள் அதை ஏற்க மறுத்ததால், பெண் காவலர்கள் மூலம் மறியலில் ஈடுபட்டோர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர். 
பின்னர், நகராட்சி அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னரே, மறியலைக் கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். 
இந்த மறியலால் அருப்புக்கோட்டை-விருதுநகர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com