சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தற்போது பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம் ஆகிவற்றுக்கு 9 மருத்துவர்கள் உள்ளனர். ஆனால், அறுவை சிகிச்சைக்கு இரு மருத்துவர் பணியிடங்கள் உள்ள நிலையில், கடந்த ஓராண்டாக ஒரு மருத்துவர் கூட பணியில் இல்லை.
ஒவ்வொரு மாதமும் சுமார் 50 முதல் 60 வரையிலான அறுவை சிகிச்சைகள் இங்கு நடைபெற வேண்டிய நிலையில், அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அறுவை சிகிச்சைக்கு உரிய கட்டணத்தை அரசு செலுத்தினாலும், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், தனியார் மருத்துவமனைக்கு அலைந்து தவிக்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே இந்த மருத்துவமனைக்கு அரசு இரு அறுவை சிகிச்சை மருத்துவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதே போன்று, எலும்பு மூட்டு சிகிச்சைக்கான முதுநிலை மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளதால் கடந்த ஓராண்டாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் நோயாளிகள் அவதிப்படுகிறார்கள். மேலும் பல் மருத்துவரும் தற்போது இல்லை.
இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் கூறியது: அறுவை சிகிச்சை மருத்துவர் இருவர், எலும்பு மூட்டு சிகிச்சைக்கு முதுநிலை மருத்துவர், பல் மருத்துவர் ஆகியோரை நியமிக்க கோரி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றார்.
மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மற்றும் மின்தூக்கி வசதி இல்லாமல் இருந்தது. இப்போது இந்த இரண்டிற்கும் அரசு அனுமதி வழங்கியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.