சாத்தூரில் வாருகால் மற்றும் சாலை வசதி செய்து தர நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகாரட்சி பகுதியில் உள்ள தேவர் சிலையிலிருந்து நடராஜா தியேட்டர் செல்லும் சாலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சாலை மற்றும் வாருகால் வசதி செய்யபட்டது. பின்னர் இந்த சாலை மற்றும் வாருகால் முறையாக பராமரிக்கப்படவில்லை.
இதனால் இப்பகுதியில் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் குடியிருப்பு அருகே கழிவுநீர் செல்ல வழியில்லாமல் சாலையோரத்திலும், குடியிருப்பு அருகேயும் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.
மேலும் மழைகாலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலப்பதால் இப்பகுதியே துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் இப்பகுதியினர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து இப்பகுதியினர் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே பொதுமக்கள் நலன் கருதி நடராஜா தியேட்டர் சாலையை சீரமைத்து, வாருகால் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.