விருதுநகர் மாவட்ட கருவூலம் முன் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர்கள் கருவூலம் மூலம் சம்பளம் பெறுவதற்கு புதிய திட்டமான ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.
என்னும் மென்பொருளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான தனி இணையதளத்தில் மென்பொருள் சேவை கிடைக்கவில்லை.
இதனால், அரசு ஊழியர்களின் சம்பள விவரம் உள்ளிட்டவைகளை அதில், ஏற்ற முடியவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஊழியர்களின் ஒப்புதல் இல்லாமலேயே பணிப் பதிவேடு கணினி மயமாக்கப்பட்டுள்ளதாம்.
எனவே, இத்திட்டத்தை கைவிடக் கோரி விருதுநகர் மாவட்ட கருவூலம் முன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் லட்சுமி நாராயணன், மாவட்ட துணைத் தலைவர் ச.இ.கண்ணன் ஆகியோர், இத்திடத்தில் உள்ள இடர்பாடுகள் குறித்துப் பேசினர். இதில், அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.