அகில இந்திய அளவிலான பளுதூக்கும் போட்டியில் அருப்புக்கோட்டை வீரர் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.
இது குறித்து, விருதுநகர் மாவட்ட பளுதூக்குவோர் சங்கத் தலைவரும், சிவகாசி முன்னாள் நகர்மன்றத் தலைவருமான ஏ. ஞானசேகரன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் அகில இந்திய மாஸ்டர்ஸ் பளுதூக்குவோர் சம்மேளனம் சார்பில், பளுதூக்கும் போட்டிகள் கடந்த பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இப்போட்டியில், 45 முதல் 49 வயதுக்குள்பட்டோருக்கான 89 கிலோ எடைப் பிரிவில், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கே. நல்லதம்பி, தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
தேசிய அளவில் சாதனை புரிந்துள்ள கே. நல்லதம்பி, விருதுநகர் மாவட்ட பளுதூக்குவோர் சங்கத்தைச் சேர்ந்தவராவார். இவரை, சங்கத்தின் செயல் தலைவர் ஆர். கண்ணன், பொருளாளர் எஸ். வேல்முருகன் மற்றும் வீரர்கள் பாராட்டினர்.