ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேரூராட்சி அலுவலகம் சென்ற பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டிய செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மம்சாபுரத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலர் பெருமாள் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலர் கே. அர்ச்சுனன், ஒன்றியச் செயலர் எஸ்.வி. சசிகுமார் கண்டன உரையாற்றினர்.
மம்சாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் வீட்டு வரி செலுத்தச் சென்ற பஞ்சவர்ணம் என்ற பெண்ணை தகாத வார்த்தைகளால் பேரூராட்சி செயல் அலுவலர் பேசினாராம். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
எனவே, காவல் துறையைக் கண்டித்தும், செயல் அலுவலர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில், ஒன்றியக் குழு உறுப்பினர் அழகம்மாள், மாரியப்பன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.