இந்திய அளவிலான தாவர ஆய்வுக்கு சிவகாசி காளீஸ்வரி கல்லூரி மாணவர் எஸ்.வைரமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அக்கல்லூரி முதல்வர் சீ.கிருஷ்ண மூர்த்தி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மகாராஷ்டிரா மாநிலம் புனேவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்திய தேசிய அறிவியல் கழகம், இந்திய தாவர ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து புதிய வகை தாவர இனங்களை கண்டறியவும், அழிந்து வரும் தாவரங்களை அடையாளம் கண்டு, அவற்றை பாதுக்காகவும், இது குறித்த ஆய்வு பயிற்சிக்கு இந்திய அளவில் 400 மாணவர்களை தேர்வு செய்துள்ளது.
அவர்களில் இக் கல்லூரியில் தாவரவியல்துறை 2 ஆம் ஆண்டு பயிலும் மாணவர் எஸ்.வைரமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்வான 400 மாணவர்களில் தனியார் கல்லூரிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே மாணவர் இவர் மட்டுமே.
இவர் ஆய்வு பயிற்சிக்காக மே மற்றும் ஜூன் மாதம் புனே சென்று, இந்திய தாவர ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானி லட்சுமி நரசிம்மன் வழிகாட்டுதலின் படி ஆய்வுப் பயிற்சியை மேற்கொள்வார். இதற்கான செலவினங்களை இந்திய தாவர ஆராய்ச்சி நிலையம் ஏற்றுக் கொள்ளும். இவருக்கு கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மணிகண்டன் வழிகாட்டி வருகிறார். இந்திய அளவில் தேர்வான மாணவரை கல்லூரித் தாளாளர் ஏ.பி.செல்வராஜன் மற்றும் பேராசியர்கள் வெள்ளிக்கிழமை பாராட்டினர்.