சிவகாசியில் வியாழக்கிழமை இரவு பணியின் போது இயந்திரத்தில் சிக்கி அச்சகத் தொழிலாளியின் கால் துண்டானது.
சிவகாசி முனீஸ்வரன் காலனியைச் சேர்ந்தவர் பால்கண்ணன்(36). இவர் இங்குள்ள தனியார் ஆப்செட் அச்சகத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு இவர் பணியிலிருந்த போது, இவரது வலதுகால் இயந்திரத்தில் சிக்கியதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக சக பணியாளர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பலத்த காயமடைந்த அவரது கால் மிகவும் சேதம் அடைந்து விட்டதால், வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்றியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அவரது மனைவி முனீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.