விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோயிலில் வரையப்பட்டிருந்த தாமரை கோலத்தை அழிக்க காவல் துணைக் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதையடுத்து கோலம் அழிக்கப்பட்டது. இதற்கு பக்தர்கள், பாஜகவினர், இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் புராணங்களை விளக்கக் கூடிய ஓவியங்கள் மற்றும் பல்வேறு வகையிலான பூக்கள் நுழைவு வாயில் மற்றும் உள்பிரகாரத்தில் வரையப்பட்டுள்ளன. கோயில் நுழைவு வாயிலில் நீண்ட காலமாக வர்ணப்பூச்சு மூலம் தாமரை மலர் கோலம் வரையப்பட்டு அது பாதி அழிந்த நிலையில் உள்ளது.
இதனை பாரதிய ஜனதா கட்சியின் சின்னம் எனக் கருதி, ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜா, கோயில் செயல் அலுவலரிடம் அழிக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து வெள்ளிக்கிழமை கோயில் பணியாளர்களைக் கொண்டு செயல் அலுவலர் சுண்ணாம்பு தடவி கோலத்தை அழித்துள்ளார். மேலும் இரவோடு இரவாக அழித்த கோலத்தின் மீது வேறு பூக்களை வரைய செயல் அலுவலர் நடவடிக்கை எடுத்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பாஜகவினர், இந்து அமைப்பினர் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.