விருதுநகர் மாவட்டத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் டிஜிட்டல் முறையில் சிக்னல் வழங்காமல் அனலாக் முறையில் சிக்னல் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேபிள் டிவி தனி வட்டாட்சியர் கிருஷ்ணவேணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் மத்திய அரசின் டிராய் விதிமுறைக ளின்படி கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் சேனலை தேர்வு செய்யும் முறையினை நடைமுறைப்படுத்தி வருகிறது. எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்களை அணுகி படிவங்களை பூர்த்தி செய்து பயனடையலாம்.
மேலும் அனலாக் முறை நிறுத்தப்பட்டு டிஜிட்டல் முறையில் கேபிள் டிவி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கேபிள் டிவி ஒழுங்குமுறைச் சட்டம் 1995, சட்டப் பிரிவு 4(3) ன்படி உள்ளுர் கேபிள்டிவி ஆபரேட்டர்கள் அனலாக் சிக்னலை முற்றிலும் தவிர்த்து டிஜிட்டல் சிக்னலாக மட்டுமே ஒளிபரப்பு செய்ய வேண்டும்.
டிஜிட்டல் முறையில் சிக்னல் வழங்காமல் அனலாக் முறையில் சிக்னல் வழங்கும் ஆபரேட்டர்களின் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், விதிகளை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டணை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். எனவே, கேபிள் ஆபரேட்டர்கள் அனைவரும் டிஜிட்டல் முறையில் மட்டுமே கேபிள் டிவி ஒளிபரப்பினை தொடர வேண்டும் என்றார் அவர்.