விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தேர்தல் பறக்கும் படை வாகனச் சோதனையில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருள்கள் சிக்கின.
சாத்தூர்-கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி மாரிமுத்து மற்றும் போலீஸார் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். வாகனத்தில் 36 மூட்டைகள் இருந்தன.
அவற்றில் என்ன உள்ளது என வாகன ஓட்டுநரான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமாரிடம் (35) கேட்டபோது, சேலத்திலிருந்து-தூத்துக்குடிக்கு சேலைகளை கொண்டு செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் சந்தேகத்தின் பேரில் வாகனத்தில் இருந்த மூட்டைகளை போலீஸார் பிரித்து சோதனையிட்டனர். அப்போது அவை தடைசெய்யபட்ட புகையிலை பொருள்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை மூட்டைகளுடன் வாகனத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள், சரக்கு வாகனத்தை, சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சுரேஷ்குமாரை கைது செய்தனர். மேலும் ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலை மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.