பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து ராஜபாளையத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளர் எஸ்.கணேசமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜெயக்குமார், பகத்சிங், மகாலிங்கம், அய்யர் ராமச்சந்திரன், ராஜகுரு, மோகன் ஆகியோர் கண்டித்துப் பேசினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.லிங்கம், நகரச் செயலாளர் வி.ரவி, ஒன்றியச் செயலாளர்கள் எஸ்.வீராச்சாமி ஆர்.பி.முத்துமாரி உள்ளிட்டோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர்.
பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை விடியோவில் பதிவு செய்து மிரட்டிய குற்றவாளிகள் மீது உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகளை பதவி நீக்கம் செய்து, அவர்கள் மீது
குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என இதில் வலியுறுத்தப்பட்டது.