ராஜபாளையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சனிக்கிழமை சரக்கு வாகனத்தில் இருந்த ரூ.2.44 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
ராஜபாளையம்- மதுரை சா லையில் உள்ள காவல் சோதனைச் சாவடி எதிரே, தேர்தல் பறக்கும் படை அதிகாரி பெருமாள்சாமி, காவல் துறை கூடுதல் உதவி ஆய்வாளர் அய்யலுசாமி உள்ளிட்ட குழுவினர் வாகசச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.2.44 லட்சம் இருந்தது. அந்த வாகன ஓட்டுநரான ராசிபுரத்தைச் சேர்ந்த செல்வராஜிடம் விசாரித்தபோது, நாமக்கல்லில் இருந்து கேரளாவுக்கு கோழி முட்டை பாரம் இறக்கி விட்டு, பணம் வசூலித்து திரும்புவதாகக் கூறி உள்ளார்.
ஆனால் பணத்திற்கு எந்தவிதமான ஆவணமும் அவரிடம் இல்லாததால், பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியர் ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்.
பணத்தை வட்டாட்சியர், சார் நிலை கருவூலத்தில் ஒப்படைத்தார். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என, அதிகாரிகள் ஓட்டுநரிடம் அறிவுறுத்தினர்.