தனித்திறன் போட்டிகளில் அருப்புக்கோட்டை பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
By DIN | Published On : 22nd March 2019 07:13 AM | Last Updated : 22nd March 2019 07:13 AM | அ+அ அ- |

அருப்புக்கோட்டை சந்திரா நேசனல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தில்லியைச் சேர்ந்த இண்டர்நேசனல் ஒலிம்பியாட் பவுண்டேசன் நடத்திய பல்வேறு தனித்திறன் போட்டிகளில், வெற்றி பெற்று பரிசுகளை வென்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக இப்பள்ளிச் செயலர் பி.சி. பார்த்திபன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தில்லியைச் சேர்ந்த இண்டர்நேசனல் ஒலிம்பியாட் பவுண்டேசன் அமைப்பு பள்ளிகளிடையேயான பல்வேறு தனித்திறன் போட்டிகளை நடத்தி வருகிறது.
இப்போட்டிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் எங்கள் பள்ளியின் 1 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களில் ஆங்கில தனித்திறன் போட்டிகளில் 4 ஆம் வகுப்பு மாணவர் ம.ர.அனீஸ்குமார், 5 ஆம் வகுப்பு மாணவர் கு.அபிஜித் , 6 ஆம் வகுப்பு மாணவர் ச.விஸ்வா ஆகியோர் பரிசுகளை பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
அதே போல் அறிவியல் தனித்திறன் போட்டிகளில் 4 ஆம் வகுப்பு மாணவர் ச.ஹர்திக் நடேஷ், 5ஆம் வகுப்பு மாணவர் தி.சஸ்வந்த், 6 ஆம் வகுப்பு மாணவர்கள் ச.விஸ்வா, மாணவி அ.ச.ராகசந்தோஷி ஆகியோரும், கணித தனித்திறன் போட்டியில் 4 ஆம் வகுப்பு மாணவர் ஜெ.கீதப்பிரியன், 5 ஆம் வகுப்பு மாணவர் க.அபிஜித், 6 ஆம் வகுப்பு மாணவி அ.ச.ராகசந்தோஷி ஆகியோரும் பல்வேறு பரிசுகளை வென்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
இப்போட்டிகளில் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவ, மாணவியரை பள்ளிச் செயலர் பி.சி.சரவணன், பள்ளித் தாளாளர் பி.சி.பார்த்திபன் மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...