விருதுநகர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேமுதிக, பகுஜன் சமாஜ் கட்சி உள்பட 7 வேட்பாளர்கள் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனர்.
இதன் மூலம் இத்தொகுதியில் இதுவரை 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
மாவட்ட தேர்தல் அலுவலரிடம் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் விபரம்: மதுரை, பழங்காநத்தம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த ராஜைய்யா மகன் அழகர்சாமி (46) தேமுதிக சார்பில் மனு தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி உடனிருந்தார்.
மேலும், தேமுதிக மாற்று வேட்பாளராக மதுரை தெற்குமாசி வீதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (50) மனு தாக்கல் செய்தார்.
அதேபோல் சூலக்கரை பகுதியைச் சேர்ந்த முத்து மகன் பெருமாள்சாமி (40) பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தார். மதுரை எஸ்எஸ் காலனியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் சக்கரவர்த்தி (45) இந்திய புரட்சித் தலைவர் முன்னேற்றக் கழகம் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ராஜபாளையம் தெற்கு பொன்னகரத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் வள்ளிநாயகம் (37), அருப்புக்கோட்டை பந்தல்குடி சாலை பகுதியை சேர்ந்த முனிசாமி மகன் முத்துமாரியப்பன் (65) ஆகியோர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தனர்.
மேலும், வத்திராயிருப்பு மேலத் தெருவை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்ற கரிகாலன் (39) தமிழர் மீட்பு களம் என்ற அமைப்பின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதன் மூலம் திங்கள்கிழமை மட்டும் 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இத்தொகுதியில் போட்டியிட இதுவரை 11 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.