விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பெரிய கண்மாய் குறுக்கே செல்லும் சாலையில் தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து அபாயம் உள்ளது. எனவே விரைவில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டையிலிருந்து பந்தல்குடி செல்லும் சாலையில் உள்ள பெரிய கண்மாயின் குறுக்கே போக்குவரத்து வசதிக்காக பல ஆண்டுகளுக்கு சாலை அமைக்கப்பட்டது. சுமார் 300 மீட்டர் நீளமான சாலையில் இரு புறமும் சுமார் 8 அடி ஆளம் உடைய கண்மாய் பகுதியாகும்.
ஆனால் விபத்து ஏற்படாமல் இருக்க சாலையின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கவில்லை. இருபுறமும் தண்ணீர் பாயும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் மட்டும் தடுப்புச்சுவர் உள்ளது. மேலும் சாலையின் இருபுறமும் மின்விளக்கு
வசதியும் இல்லை. இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் செல்லும் வாகனங்கள் தடுமாறி விழுந்து சுமார் 8 அடி ஆழமுள்ள கண்மாய்க்குள் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை இருந்து வருகிறது.
பள்ளி வாகனங்கள், சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவர்களும் நாள்தோறும் இந்த சாலையில் சென்று வருவது குறிப்பிடத்தக்கது. எனவே இதுதொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து கண்மாயின் குறுக்கே உள்ள சாலையின் முழு நீளத்திற்கும் கூடுதல் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.