சாத்தூரில் குடிநீருடன் கழிவு நீர்  கலப்பதாக பொது மக்கள் புகார்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சி பகுதியில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சி பகுதியில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
சாத்தூர் நகராட்சி பகுதிக்குள்பட்ட 16, 17, 24 ஆவது வார்டுகளுக்கு உள்பட்ட நகராட்சி காலனி, தேரடிதெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் பின்புறம் அமைந்துள்ள தண்டவாள பகுதியிலும், தெருவின் பின்புறமும் கழிவுநீர் அதிகமாக தேங்கியுள்ளது. இதனால், இப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. 
மேலும், மர்மக் காய்ச்சல்களும், டெங்கு உள்ளிட்டநோய்களும் பரவும் அபாயம் உள்ளது. இப் பகுதியில் அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளிகளும் உள்ளதால் குழந்தைகள் நோய் தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் ஒரு சில பகுதிகளில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். 
மேலும், இப்பகுதிகளில் உள்ள கழிவுநீர் வைப்பாற்றில் கலப்பதால் நிலத்தடி நீரும் மாசுபடுகிறது.
எனவே, இப்பகுதியில் முறையான வாருகால் வசதிகள் ஏற்படுத்தி, கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மகேஷ்வரன் கூறியது: கடந்த ஆட்சியில் இங்கு வாருகால் அமைப்பதற்காக ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, அதில் பகுதியளவே வாருகால் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இப் பகுதியில் முழுமையாக வாருகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியது: 
இப்பகுதியில் ரயில்வே துறைக்குச் சொந்தமான இடமும் உள்ளதால் கழிவுநீர் வாருகால் அமைக்க முடியாத நிலை உள்ளது. மேலும், கழிவுநீரை சுத்தம் செய்ய வேண்டுமென்றாலும் ரயில்வே துறையினரின் அனுமதி பெறவேண்டிய சூழ்நிலை உள்ளது. இருந்த போதிலும் இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com