விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே எஸ். ராமலிங்காபுரத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன்கள் ஆறுமுகம் (20) மற்றும் குருசாமி (23). கூலி தொழிலாளர்களான இவர்கள் இருவருக்கும், சமுசிகாபுரத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்ற சக்திவேல் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆறுமுகம், குருசாமி ஆகிய இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டு வாகைக்குளம்பட்டி ரேஷன் கடை அருகே வந்துகொண்டிருந்துள்ளனர். அப்போது, இவர்களை சக்திவேல் வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்று விட்டாராம். காயமடைந்த அண்ணன், தம்பி இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து அவர்கள் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.