உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் விருதுநகர் சொக்கநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.
விருதுநகரில் இந்து சமய அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட சொக்கநாதர் கோயில் உள்ளது. பழமையான இக்கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் ஞாயிற்றுக்கிழமை காலை 6 முதல் 8 மணி வரை சிறப்பு யாகம் நடைபெற்றது. பாலாஜி பட்டர் தலைமையில் நடைபெற்ற இந்த யாகத்தில், ருத்ர பாராயணம், வேத பாராயணம் உள்ளிட்ட மந்திரங்கள் ஓதப்பட்டன.
அதைத் தொடர்ந்து, சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.