விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனது சகோதரிகளின் வீட்டை எழுதித் தருவதாக கூறி, ரூ.1.58 லட்சம் மோசடி செய்ததாக ஒருவர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
ராஜபாளையம் சோமையாபுரம் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுத்தாய் (50). இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவர், தனது சகோதரிகளான பிச்சை, சீனியம்மாள், பேச்சியம்மாள் ஆகியோருக்கு சொந்தமான வீட்டை விற்பதற்காக தனக்கு பவர் பத்திரம் எழுதிக் கொடுத்து இருப்பதாகவும், அதன்படி ஒப்பந்த பத்திரம் எழுதிக் கொடுத்து ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு, வீட்டை கிரையம் செய்து கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் சங்கர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.