விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதியதில் 4 பேர் காயமடைந்தனர்.
சென்னை நெசப்பாக்கம் கேகே நகர் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவரும், ஓய்வு பெற்ற உள்ளாட்சித் தேர்தல் தலைமை அதிகாரி அய்யர் என்பவரின் மகனுமான பாலாஜி (35), தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் கிராமத்திலுள்ள தனது குலதெய்வக் கோயிலுக்கு காரில் தனது மனைவி தமிழ்ச்செல்வி (30), மகள்கள் அனுசிகா (7), ஜெயசிதா (3) ஆகியோருடன் புதன்கிழமை அதிகாலை சென்னையிலிருந்து புறப்பட்டுள்ளார்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி கிராமத்தின் புறவழிச்சாலையில் வந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. இதில் பாலாஜி, தமிழ்ச்செல்வி, அனுசிகா, ஜெயசிதா ஆகிய நால்வரும் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த பந்தல்குடி போலீஸார் காயமடைந்த நால்வரையும் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நால்வரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து பந்தல்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.