அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை ஏற்பட்டதால் அருப்புக்கோட்டை நகரமே இருளில் மூழ்கியது.
அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த இரு வாரங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் வெப்பத்தைத் தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனிடையே வியாழக்கிழமை மாலை சுமார் 4.45 மணி முதல் மாலை 5.15 மணி வரை பலத்த இடிமின்னலுடனும், சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
அதிக இடிமின்னல் காரணமாக ஏற்பட்ட மின் தடையானது சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் அருப்புக்கோட்டை நகரமே இருளில் மூழ்கியது. பொதுமக்கள் கடும்அவதிக்கு ஆளாகினர்.