விருதுநகர் பஜார் பகுதியில் கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த 4 டன் நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
தமிழகத்தில் ஜனவரி மாதம் முதல் நெகிழிப்பைகள் பயன்படுத்த மற்றும் விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன் அடிப்படையில் விருதுநகர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி தலைமையிலான சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வாடியான் கேட் செல்லும் சாலையில் ஒரு கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு டன் நெகிழிப் பைகளை பறிமுதல் செய்து, அக்கடை உரிமையாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், தொடர்ந்து நெகிழிப் பைகள் விற்பனை செய்வோர் கடை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்தனர். இதனிடையே, விருதுநகர் பஜார் பகுதியில் நகராட்சி ஆ ணையர் தலைமையில் வியாழக்கிழமை திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிவசங்கர பாபு என்பவருக்கு சொந்தமான கடையில் ஆய்வு செய்த போது தடை செய்யப்பட்ட நான்கு டன் நெகிழிப் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அக்கடைக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும், அப்பகுதியில் இருந்த 5 கடைகளில் ஆய்வு செய்த போது குறைந்தளவு நெகிழிப் பைகள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவர்களுக்கும் தலா ரூ.1000 வீதம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.