விருதுநகர் அருகே பூசாரிபட்டி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்- சாத்தூர் செல்லும் நான்கு வழிச்சாலையில் பூசாரிபட்டி பேருந்து நிறுத்தம் உள்ளது. இக்கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் கூலித் தொழில் செய்து வருவதால், தினந்தோறும் விருதுநகர், ஆர்ஆர் நகர் பகுதிக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், பூசாரிபட்டி பேருந்து நிறுத்தத்தில் நிழற் குடை அமைக்கக் கோரி ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
தற்போது கத்தரி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அக்கிராம மக்களே, நான்கு வழிச் சாலையின் ஓரத்தில் கற்களை ஊன்றி, அதன் மேல் தட்டி வேய்ந்து தற்காலிக நிழற்குடை அமைத்துள்ளனர். ஆனாலும், மழை காலங்களில் இந்த நிழற்குடையில் நிற்க முடியாத சூழல் உள்ளதாக அக்கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, பூசாரிபட்டி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.