விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொலை செய்த கணவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பாட்டக்குளம், வடக்குத் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கிருஷ்ணசாமி (35). இவரது மனைவி ராதிகா (30). இத்தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ராதிகா ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீட்டில் காயங்களுடன் இறந்து கிடந்தார். வெளியே இருந்து வீட்டிற்கு வந்த மகள், தாய் சடலமாகக் கிடப்பதைக் கண்டு கூக்குரலிட்டு வெளியே ஓடிவந்துள்ளார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் கிருஷ்ணன்கோவில் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீஸார் ராதிகாவின் சடலத்தை மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து கணவர் கிருஷ்ணசாமியைக் கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.