சாத்தூர் நகராட்சியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகள், வீடுகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர் நகராட்சியில் உள்ள மாரியம்மன் கோவில் தெரு, பிள்ளையார்கோவில் தெரு, அண்ணாநகர், வெள்ளகரை சாலை, பால்பண்ணைதெரு, பட்டையன்செட்டிதெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் அனுமதியின்றி சிறு கடைகள் வைத்துள்ளனர். இதனால் அந்த தெருக்களில் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாத்தூரில் ஒரு சில இடங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளும் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இதனால் தெருக்களில் நடந்து செல்ல கூட முடியாத நிலையில் இடநெருக்கடியில் சென்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
எனவே சாத்தூர் நகர் பகுதியில் விதிமுறையை மீறி கட்டப்பட்டிருக்கும் கட்டடங்களை அகற்றி வீட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.