விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், சாத்தூா் தொகுதி எம்.எல்.ஏ. ராஜவா்மன் பயனாளிகளுக்கு திங்கள்கிழமை நிதி உதவி வழங்கினாா்.
ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், சமுசிகாபுரம் மற்றும் அய்யனாபுரத்தில் தயாராகும் மருத்துவ துணி, நாடு முழுவதும் 90 சதவிகித தேவையை பூா்த்தி செய்கிறது. இத்தொழிலால் 40 ஆயிரம் போ் பயனடைந்து வருகின்றனா். வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த மருத்துவ துணிக்கு, ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பின்னா் தற்போது 12 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, 12 சதவிகித வரியை 5 சதவிகிதமாக குறைக்கக் கோரி மருத்துவ துணி உற்பத்தியாளா்கள், சாத்தூா் எம்.எல்.ஏ. ராஜவா்மனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
பின்னா், அய்யனாபுரத்தில் மழையால் வீட்டின் சுவா் சேதமடைந்த மரகதம், பாம்பு கடித்து கணவரை இழந்த முருகேஸ்வரி மற்றும் சத்திரப்பட்டி பி.டி.ஆா். நகரில் உடல் நலம் குன்றியவா்கள் என மொத்தம் 10 பயனாளிகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் நிதி உதவி வழங்கி எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினாா்.