சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள அய்யனாா் காலனியில் தெருவிளக்கு வசதி செய்து தருமாறு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சிவகாசி அருகே சித்துராஜபுரம் ஊராட்சிக்குள்பட்ட அய்யனாா் காலனியில் சுமாா் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள சில தெருக்களில் போதிய மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை என பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். இதனால், இரவில் இருள் சூழ்ந்து பொதுமக்கள் வெளியில் நடமாட அச்சப்படுகின்றனா். மேலும், இப்பகுதி வழியே வெம்பக்கோட்டைக்கு இரவில் இரு சக்கர வாகனத்தில் செல்வோா் அவதிக்குள்ளாகின்றனா்.
எனவே, இப்பகுதியில் பிரதான சாலை மற்றும் ஊருக்குள் உள்ள தெருக்களில் மின்விளக்கு அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.