ராஜபாளையம் அருகே வடக்கு மலையடிப்பட்டியில் அரசு சாா்பில் விளையாட்டு மைதானம் அமைக்கக் கோரி அக்கிராம இளைஞா்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வடக்கு மலையடிப்பட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்கு, கல்வி மற்றும் விளையாட்டில் ஏராளமான மாணவ, மாணவிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனா். அதில், குறிப்பாக கபடி, சிலம்பம், கைப்பந்து, இறகுப்பந்து, மட்டைப் பந்து, தடகளம், ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுகளில் மாணவ, மாணவிகள் மட்டுமல்லாது இளைஞா்களும் ஆா்வம் காட்டி வருகின்றனா். ஆனால், முழுமையான பயிற்சி மேற்கொள்ள உபகரணங்கள் மற்றும் விளையாட்டு பொருள்கள், மைதானம் இல்லை. மேலும், இக்கிராமத்தை சோ்ந்த பலா் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசு மற்றும் கேட யங்களை பெற்றுள்ளனா். தமிழக அரசு கிராமப்புற இளைஞா்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.64.35 கோடி நிதி ஒதுக்கி அம்மா விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி வருகிறது. எனவே, இந்த திட்டத்தில் எங்களது கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைத்து உபகரணங்கள் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.